Sunday, 14 June 2020

கானகத்தில் என் கண்மணி

தூக்கணாங்குருவிக் கூடு
உன் அடர் கூந்தலில் 
நான் முகம் புதைத்திட்ட போழுதினை
நினைவூட்டுகிறது

நீரோடை உனைப் போலவே இனிதாய் 
ஜல்ஜல்லென
சிரித்தோடும் வேளையில்
காற்றில் சிறு பூச்செடிகள்
உன் விரல்கள் போலவே
நடனம் பழகின

பெரும் மரத்தின் மீது 
சுற்றிப்படரும் கொடியோன்று 
நீயெனை கட்டித் தழுவிய கதை கேட்கிறது

பாதையோர
தொட்டாற் சிணுங்கி
நான் மயக்கம் கொண்டுனை 
அள்ளி அணைக்கயில்
நீ துள்ளித் திமிறி
வெட்கம் கொண்டதைச்
சொல்லி நாணியது

உன் சின்னப் பாதங்களை
நதியினில் நனைத்ததில்
நீ கால் வைத்த இடமெல்லாம்
நதி உனைத் தொடர்ந்து
பாதை மறந்தது

மணம் தரும் மலர்கள்
உனை நுகர்ந்து
பொறாமை கொண்டதால்
ஒரு நாளைக்குள்
வாடிச்சுருங்கின

செடிகளை கொடிகளை
நீ வருடிய இடங்களில்
நோடியினில் அழகாய்
புது பூக்கள் பூத்தன

பச்சை வண்ண 
ஆடை‌ பூண்டு
நெஞ்சமெல்லாம்
நிறைந்திருப்பது
கானகமா
இல்லை ‌என் கண்மணியா?

1 comment:

Soruba Maheshkumar said...

Wow 🤩
Wat a wonderful writing and I felt u wrote each nd every lines from deep inside of ur heart ❤️
It’s so lovely …