Monday, 11 November 2019

காணாத நாட்கள்


நீ அருகிலாத
பொழுதுகளில்
இந்த அறை
முழுதும் உன் வாசமே
நிரம்பித் திளைக்கிறது

சிறு கொலுசின்
மணி போல
நீ சிரிக்கும்
மென் ஒலியே
காற்றில் அலைகிறது

நீர்ப் பறவையின்
அலகில் சிக்குண்ட மீனாய்
மனம் துள்ளித் துடிக்கிறது

காணாத நாட்களையே
காலத்தின் சுவட்டிலிருந்து
அழித்துவிட முடியாதா

ஓர் நொடி
கண்மூடி விழித்தால்
மந்திரம் செய்தது போல்
உன் முன் வரவே
முடியாதா

இந்த கொடுந்துயர்
தாளாது
கவி எழுதித்
தீராது

விடைபெறும் தருணத்தில்
உன் கைப்பையில்
எனை திணித்துக் கொள்

போகுமிடமெலாம்
எனை தூக்கிச் செல்
கண்மணி.

No comments: