நீ அருகிலாத
பொழுதுகளில்
இந்த அறை
முழுதும் உன் வாசமே
நிரம்பித் திளைக்கிறது
சிறு கொலுசின்
மணி போல
நீ சிரிக்கும்
மென் ஒலியே
காற்றில் அலைகிறது
நீர்ப் பறவையின்
அலகில் சிக்குண்ட மீனாய்
மனம் துள்ளித் துடிக்கிறது
காணாத நாட்களையே
காலத்தின் சுவட்டிலிருந்து
அழித்துவிட முடியாதா
ஓர் நொடி
கண்மூடி விழித்தால்
மந்திரம் செய்தது போல்
உன் முன் வரவே
முடியாதா
இந்த கொடுந்துயர்
தாளாது
கவி எழுதித்
தீராது
விடைபெறும் தருணத்தில்
உன் கைப்பையில்
எனை திணித்துக் கொள்
போகுமிடமெலாம்
எனை தூக்கிச் செல்
கண்மணி.

No comments:
Post a Comment